புனா ஒப்பந்தம் பற்றிய சுயமரியாதை இயக்கத்தின் பார்வை
தாழ்த்தப்பட்டோர் இயக்க வரலாற்றில் பேரளவில் இடையீடு செய்த ஒரு நிகழ்வு புனா ஒப்பந்தம் ஆகும். 24.9.32 அன்று தாழ்த்தப் பட்ட மக்களின் முக்கியத் தலைவரான அம்பேத்கருக்கும் காந்தி தலைமையிலான காங்கிரஸ், இந்துமகா சபை அணியினருக்கும் இடையே இவ்வொப்பந்தம் ஏற்பட்டது. தாழத்தப்பட்ட மக்களின் மிக முக்கியக் கோரிக்கையான இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனித்தொகுதிக் கோரிக்கையை இவ்வொப்பந்தம் நிராகரித்தது. எனினும் பொதுத் தொகுதியில் அவர்களுக்குக் கூடுதல் ஸ்தானங்கள் வழங்க ஒப்புக்கொண்டது. இவ்வொப் பந்தத்திற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளும் அவை குறித்த சுயமரியாதை இயக்கத்தின் பார்வையும் பல முக்கியமான செய்திகளை நமக்கு உணர்த்தவல்லவை. அவற்றை இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்.
பூனா ஓப்பந்தம் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே ஏற்பட்டது எனினும் காந்தி இதில் கையொப்பம் இடவில்லை. அவர் சிறையில் இருந்த காரணத்தால் அவருக்குப் பதில் அவரது மகன் தேவதாஸ் காந்திதான் இதில் கையொப்பம் இட்டுள்ளார். மேலும், ஒப்பந்தம் கையெழுத்தான போது பெரியார் ஐரோப்பியச் சுற்றுப்பயணத் தில் இருந்தார் என்பதும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டியவை ஆகும்.
இந்தியாவுக்கான எதிர்கால அரசியலமைப்பை இறுதி செய்யும் நோக்குடன் 1927இல் உருவாக்கப் பட்ட சைமன் கமிஷன் அறிக்கை தாழ்த்தப் பட்டோருக்கான பிரதிநிதித்துவம் பற்றி இவ்வாறு கூறுகிறது:
“”. . . தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்குத் தனி வழிவகை இல்லாவிட்டால் பொதுத் தொகுதிகளில் அவ்வாறு தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பே இருக்காது. நீண்டகாலப் பார்வையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம் என்பது அவர்கள் அரசியல் செல்வாக்குச் செலுத்துவதன் மூலமே அடையக்கூடியதாய் உள்ளவரை, ஏனைய சக்திகள் அவர்களின் ஆதரவை நாடுவதற்கும், அவர்களின் தேவைகளைக் கருதுவதற்கும் போதிய அளவுக்கு முக்கியத் துவம் வாய்ந்த நிலையை அவர்கள் அடை வதே பொருத்தமாய் இருக்கும்”. (காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்குச் செய்த தென்ன (1945) – அம்பேத்கர் – தலித் சாகித்திய அகாடமி, சென்னை, 1998, ப. 397)
சைமன் கமிஷன் அறிக்கையை விவாதிக்க 12.11.1930முதல் 19.1.1931வரை முதல் வட்டமேஜை மகாநாடு கூடியது. தாழ்த்தப்பட்டோர் சார்பாக டாக்டர் அம்பேத்கர், சுயமரியாதை இயக்கத் தோடும் பெரியாரோடும் நெருங்கிய தொடர்புடையவரான ராவ்பகதூர் ஆர். சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். அம்பேத்கர், சீனிவாசன் ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களுக் கான தனித்தொகுதியை அரசியலமைப்பில் சேர்க்க வலியுறுத்தினர். ஆனால் இந்தியாவின் பெரிய அரசியல் இயக்கமான காங்கிரஸ் அம்மகா நாட்டைப் புறக்கணித்ததால் முழுமையான முடிவு எதையும் அம்மகாநாடு எடுக்கவில்லை. இதனிடையே இந்தியாவில் காங்கிரசுக்கும் ஆங்கில அரசுக்கும் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அதன் விளைவாக காங்கிரஸ் தனது சட்டமறுப்பு – உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறுத்திவிட்டு மகாநாட்டில் பங்குபெறச் சம்மதித்தது. 12.9.1931இல் தொடங்கிய இரண்டாவது வட்டமேஜை மகாநாட்டில் காந்தி காங்கிரசின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.
17.9.1931இல் வட்டமேஜை மகாநாட்டில் காந்தி பேசும்போது, “”முஸ்லிம் – சீக்கியப் பிரிவுகளுக்குச் சிறப்புச் சலுகை அளித்து ஒத்துப்போகக் காங்கிரஸ் சம்மதித்துள்ளது. அதற்கு ஆணித்தரமான, சரித்திர ரீதியான காரணங்கள் உள்ளன. ஆனால் அக்கொள்கையை எந்த வடிவத்திலோ அல்லது முறையிலோ காங்கிரஸ் நீட்டிக்காது” என்று சொன்னதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் தனித்தொகுதிக் கோரிக்கையை நிராகரித்தார். (“புனா ஒப்பந்தம்’ – அம்பேத்கர், தமிழாக்கம் அ. ஜெய்சன் 1998, ப. 37)
தாழ்த்தப்பட்டோர் கோரிய தனிப்பிரதிநிதித்துவத்தைத் திராவிட இயக்கம் தொடக்கம் முதலே ஆதரித்து வந்துள்ளது என்பதைக் குடி அரசு ஆவணங்கள் காட்டுகின்றன. காந்தி தொடர்பான அம்பேத்கரின் கருத்தைப் பெரியார் அரண் செய்தார். “வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?’ என்ற தலையங்கத்தில் இவ்வாறு கூறுகிறார் (குடி அரசு, 8.11.31, பக். 10):
“”சீமையில் (லண்டனில்) அம்பேத்கர் அவர்கள் நல்ல வெளிப்படையான பாஷையில், “காங்கிரசுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை, காங்கிரசில் தாழ்த்தப்பட்ட மக்கள் கிடையாது’ என்றார். அப்படியிருக்க திரு. காந்தியார் திரும்பத் திரும்ப காங்கிரசும் தானும்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதிகளென்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்படிச் சொல்கிறவர்களுக்குச் சிறிதாவது மானமோ, சுயமரியாதையோ இருக்குமானால் அம்பேத்கருக்குப் பதில் சொல்லிவிட்டு மேற்கொண்டு சமாதானம் சொல்ல வேண்டும். . . .”
தனித்தொகுதி தொடர்பான கருத்து வேறுபாட்டின் பின்னர் ஆங்கில அரசிடமும் காந்தி சிறிது கால அவகாசம் கேட்டார். அக்கால இடைவெளியில் காந்தி முஸ்லிம்களுடன் ரகசியப் பேச்சினை நடத்தினார். அப்பேச்சு “காந்தி முஸ்லிம் ஒப்பந்த வரைவாக’ முஸ்லிம் பேராளர்கள் குழுவினரின் கருத்தறிவதற்காக 6.10.31 அன்று முன்வைக்கப்பட்டது. இவ்வொப்பந்த வரைவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கக்கூடாது என்பது நேரடி வார்த்தைகளில் இல்லை. ஆனால் இந்த வரைவில் காந்தியின் முன் மொழிவுகளில் ஒன்றான, “”சீக்கியர்கள், சிறுபான்மையினர் தவிர வேறு எந்த வகுப்பினருக்கும் தனி ஒதுக்கீடுகள் கூடாது” என்ற அம்சமானது தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியை அரவமின்றிக் காலி செய்துவிடுகின்றது.
காந்தியின் இந்த ரகசிய முயற்சி பற்றி அம்பேத்கரும் சீனிவாசனும் “டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகையில் கட்டுரை எழுதினர். அக்கட்டுரையைக் குடி அரசு (8.11.31, பக். 16) மறுவெளியீடு செய்து காந்தியை அம்பலப் படுத்தியது. பம்பாயில் அம்பேத்கர் பேசிய பேச்சின் விவரங்களைச் “சண்டமாருதம்’ வெளியிட்டிருந்தது. அதனை 7.2.32 நாளிட்ட குடி அரசு “லண்டனில் திரு. காந்தி தந்திரமா? சூழ்ச்சியா? டாக்டர் அம்பேத்கர் விளக்கம் என்ற தலைப்பில் மறுவெளியீடு செய்தது.
தனித்தொகுதிக்கு எதிராக காந்தி முன்வைத்த வாதங் களின் அபத்தத்தையும் சுயமுரண்பாட்டையும் சுய மரியாதை இயக்கம் அவ்வப்போது தோலுரித்துவந்தது. “திரு. காந்தி தனித்தொகுதியை மறுப்பதன் ரகசியம்’ என்ற கட்டுரையிலிருந்து: (குடிஅரசு, 22.11.31, பக். 8 )
“”. . . திரு. காந்தி சரித்திர சம்பந்தமான காரணங்களால் முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் தனிப்பிரதிநிதித் துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறினார். இவ்வார்த்தையால் காந்தியின் மனப்பான்மை நன்றாக விளங்குகின்றது. முஸ்லிம்களும் சீக்கியர்களும் பரம் பரைப் பெருமையோடு ஆட்சி புரிந்தார்கள். ஆகை யால் அரசாங்க உரிமைகளுக்குப் பாத்திரமுடையவர் கள். . . என்ற கருத்தும் தீண்டாதார்களோ பரம்பரை யாகச் சுதந்திரமின்றி அடிமையாக வாழ்ந்தார்கள்; ஆகையால் அவர்களுக்குத் தனித்தொகுதிப் பாதுகாப்பு அவசியமில்லை என்ற கருத்தும் அடங்கி இருக்க வில்லையா?” என்கிறது.
இதே கருத்து அம்பேத்கரின் எழுத்துகளில் காணக் கிடைப்பது வியப்பான ஒன்றாகும்,
“”முஸ்லிம்களையும் சீக்கியர்களையும் அங்கீகரிக்கும்படி தம்மைக் கட்டாயப்படுத்தும் வரலாற்றுக் காரணங்கள் இருப்பதாக அவர் (காந்தி) வாதிடுகிறார். அந்தக் காரணங்கள் என்ன என்பதை அவர் விளக்கியதே இல்லை. முஸ்லிம்களும் சீக்கியர்களும் பழைய ஆளும் வர்க்கங்களின் மிச்ச சொச்சங்களாகக் கருதுகின்ற காரணங்களைத் தவிர அவை வேறு எதுவாகவும் இருக்கமுடியாது”. (காங்கிரசும் காந்தியும். . . பக். 307)
காந்தி தனித்தொகுதியை எதிர்ப்பதற்கான காரணங் களாக அவரின் வர்ணாசிரம இந்து மதப்பற்று, சாதி இந்துக்கள் மீதான பற்று, தாழ்த்தப்பட்ட மக்களின் ஏதிலி நிலைமீது அவர் கொண்ட நம்பிக்கை ஆகியவை களே என அம்பேத்கர் கணித்தார். திரு. காந்தி தனித் தொகுதியை மறுப்பதன் ரகசியமென்ற 22.11.31 நாளிட்ட குடிஅரசு (ப. 8 ) கட்டுரை இவ்வாறு கூறுகிறது:
“”முஸ்லிம் – கிறிஸ்தவர் தீண்டாதார் எல்லோருக்கும் தனிப்பிரதிநிதித்துவம் கொடுத்துவிட்டால் சட்டசபை களில் அவர்களின் சரியான பிரதிநிதிகள் கண்டிப்பாக வந்துசேர்ந்து விடுவார்கள். மேற்கண்ட வகுப்பினர் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்தால் இந்துக்களின் பிரதிநிதிகளுக்குச் சற்றேறக்குறைய சமமாக ஆகிவிடு வார்கள். முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஐரோப் பியர்களும் தீண்டாதவர்களும் சமதர்ம விரோதிகள் அல்ல. ஆகையால் சமூக சமத்துவத் தீர்மானங்களும் சமதர்மத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படலாம். ஆகவே, வர்ணாசிரம வைதீக இந்துமதம் அழிய வேண்டிய நிலை வந்துவிடும் அக்கருத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் திரு. காந்தி தனிப்பிரதி நிதித்துவத்தைத் தர மறுக்கிறார்”.
தனித்தொகுதியை எதிர்க்கும் காந்தியாரின் வாதங் களே அவருக்கு எதிராகத் திரும்புவதை “குடி அரசு’ எடுத்துக்காட்டியது. “திரு. காந்தியின் முன்னுக்குப் பின் முரண்’ என்ற ஆர். ரெத்தின சபாபதி எழுதிய கட்டுரை (குடிஅரசு 15.5.32, ப. 15), வட்டமேஜை மாநாட்டில் தானே தாழ்த்தப்பட்டோருக்கு ஏகப் பிரதிநிதியென காந்தி கூறியதைச் சுட்டிக்காட்டி, இவ்வகையில் அவரைப் பாசிசவாதியான முசோலினியுடன் ஒப்பிடுகிறது.
தனித்தொகுதியை ஒழிக்க காந்தி முஸ்லிம்களோடு நடத்திய ரகசியப் பேச்சு முயற்சியை முஸ்லிம்கள் நிராகரித்தனர். காந்தியிடம் சிறுபான்மையினர் பெற்ற அனுபவம், ஒடுக்கப்பட்ட மக்களிடம் அவர்கள் நெருங்கிவரச் செய்தது. இதன் விளைவாகத் தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஐரோப்பியர்கள் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களிடம் இணக்கம் வளர்ந்தது. அது அவர்களிடையே “சிறுபான்மையோர் ஒப்பந்தம்’ ஏற்படுவதிலேயே முடிந்தது. அம்பேத்கர், ஆகாகான், பன்னீர்செல்வம், கிட்னிகர், சர்குபார்ட்ஹர் முதலா னோர் இதில் கையொப்பம் இட்டனர். இவர்களுள் இந்திய கிறிஸ்தவர்கள் சார்பாகக் கையொப்பம் இட்ட பன்னீர்செல்வம் சுயமரியாதை இயக்கத்தோடு நெருங்கிய தொடர்புடையவர், நீதிக்கட்சி உறுப்பினர். 19.6.32 நாளிட்ட குடி அரசு இதழின் தலையங்கம் சிறுபான்மையோர் ஒப்பந்தம் குறித்து வரவேற்றிருந்தது.
தாழ்த்தப்பட்டோரைத் தொடர்ந்து பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட மக்களும், “இந்து மதத்தை’ விட்டு வெளியேறக் கோரும் (20.11.32) குடி அரசுத் தலையங்கமும் குறிப்பிடத்தக்கது. தனிதொகுதி தொடர்பாகக் குடி அரசில் எழுதப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து எழுத்துகளிலும் தாழ்த்தப்பட்டோரில் முஸ்லிம்கள் அரசியல் இணைப்பையும் இந்துமதக் கற்பிதத்தை உடைப்பதையும் பற்றியுமே பெருமளவு காண முடிகின்றது.
தனித்தொகுதி தொடர்பாக இரண்டாவது மகாநாட்டி லும் எம்முடிவும் ஏற்படவில்லை. அனைத்துத் தரப் பினரும் இணைந்து ஒரு முடிவெடுத்தால் அதனை ஏற்றுக்கொள்வது என்ற தெளிவான நிபந்தனையுடன் வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்புக் கூறும் பொறுப்பு பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆங்கில அரசு தனித் தொகுதிக்கு ஆதரவான மனநிலையிலேயே உள்ளது என்பதைக் கண்ட காந்தி ஜனவரி (1932) முதல் வாரத்தில் நாடு திரும்பினார். உடனே சத்தியாக்கிரகப் போரைத் தொடர்வதாக அறிவித்தார். எனவே ஆங்கில அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறித்ததாகக் காந்தியை கைதுசெய்து புனா ஏரவாட சிறையில் அடைத்தது அரசு. சிறையிலிருந்தும் சற்றும் மனம் தளராது தனித் தொகுதிக்கு எதிராகத் தன் கருத்துகளை வெளிப்படுத்தினார். தனித்தொகுதியை ஏற்கக்கூடாது என்றும், ஏற்றால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பேன் என்றும் (11.3.1932) அரசுக்குக் கடிதம் எழுதினார்.
16.8.32 அன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனித் தேர்தல் தொகுதியை அளிக்கும் வகுப்புத் தீர்ப்பு வெளியிடப்பட்டது. 28.8.1932 குடி அரசுத் தலையங்கம், “குற்றம் சொல்ல வாய் உண்டா?’ என்ற தலைப்பில் இதனை வரவேற்றது. வகுப்புத் தீர்ப்பு வெளியான உடன், 18.8.32 அன்று, வகுப்புத் தீர்ப்பை மாற்றாவிட்டால் தான் 20.9.32 முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கபோவதாக காந்தி அறிவித்தார்.
இதனை அடுத்து சுயமரியதை இயக்கத்தின் தீவிரமான எதிர்வினைகள் எழுந்தன. 18.9.32 நாளிட்ட குடிஅரசு (ப. 7) இதழில் “காந்தியாரின் தற்கொலை’ என்ற தலைப் பில் குத்தூசி குருசாமி எழுதிய கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் காந்தியின் உண்ணாவிரதச் சத்தியாக் கிரகம் பற்றிக் கூறும் அவர், “”கடைக்கெதிரே உட்கார்ந்துகொண்டு கத்தியால் தலையிலும் கையிலும் அடித்துக்கொண்டு காசு கொடுத்தால் ஒழிய போகமாட்டேன் என்று வியாபாரத்தைக் கெடுத்து “”சத்தியாக்கிரகம்” செய்யும் சோம்பேறிக் கல்லுளிமங்கனுக்கும் தோழர் காந்தியாருக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்கும் குருசாமி, தற்கொலை செய்வது சட்டப்படி குற்றமென்பதால் காந்தியார்மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பரிந்துரை செய்கிறார். “”ஆதிதிராவிடத் தோழர்களே கல்லுளிமங்கனுக்குப் பயந்து காசு போட்டுவிடாதீர்கள் என்று முடிக்கிறார்.
அதே குடி அரசு இதழ் “காந்தியின் மரண வாக்குமுலம்’ என்ற திராவிடன் கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில், “உண்ணாவிரத அறிவிப்பின் மூலம் காந்தியார் சழுக்கர் குழாத்தில் தலைசிறந்தவராகிவிட்டார்’ என்றும் காந்தியின் ஒரு உயிரைவிட ஏழு கோடி தாழ்த்தப்பட்ட வர்களின் உயிர் பெரிது என்றும் “
நன்றி : காலச்சுவடு
அரசியல் நிர்ணய சபையின் பணிகளை ஒரு முறை திரும்பிப் பார்க்கும்போது, 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று, முதலில் கூடியதிலிருந்து இரண்டு ஆண்டுகள் பதினோரு மாதங்கள், பதினேழு நாட்கள் கழிந்துள்ளன. இந்தக் கால அளவில் அரசியல் நிர்ணய சபை மொத்தத்தில் பதினோரு முறை கூடியுள்ளது. இந்தப் பதினோரு அமர்வுகளில், நோக்கங்களைப் பற்றிய தீர்மானங்களை நிறைவேற்றவும், அடிப்படை உரிமைகள் பற்றிய குழுவின் அறிக்கை, ஒன்றியத்தின் அரசியல் சட்டம் பற்றிய அறிக்கை, ஒன்றியத்தின் அதிகாரம் பற்றிய அறிக்கை, மாகாண அரசியல் அமைப்புச் சட்டம் பற்றிய அறிக்கை, சிறுபான்மையினர் பற்றிய அறிக்கை, பட்டியல் வகுப்பினர் பற்றிய அறிக்கை, பட்டியல் பழங்குடியினர் பற்றிய அறிக்கை ஆகியவைகளைப் பரிசீலிப்பதில் கழிந்தன. ஏழு, எட்டு, ஒன்பது, பத்து மற்றும் பதினோராவது அமர்வுகள், அரசியல் சாசன வரைவுச் சட்டத்தை பரிசீலிப்பதில் கழிந்தன. அரசியல் நிர்ணய சபையின் இந்தப் பதினோரு அமர்வுகளுக்கும் 165 நாட்கள் பிடித்தன.